states

மணிப்பூர் வன்முறை : ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை!

இம்பால், ஜூன் 1 - மணிப்பூர் மாநில வன்முறைச் சம்பவங்கள்  தொடர்பாக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்படும் என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். மேலும், மணிப்பூர் மாநிலத்தில் அமைதி யை நிலைநாட்டக் குழு அமைக்கப்படும்; ஆளுநர் இதன் தலைவராக இருப்பார்; சமூக ஆர்வலர்கள் குழுவில் இடம்பெறுவார்கள் என்றும் அறிவித்துள்ளார். மணிப்பூரில் ‘மெய்டெய்’ (Meitei) என்ற  பழங்குடி அல்லாத சமூகத்தினருக்கு, ‘பழங்குடி யினர்’ அந்தஸ்து தருவதாக பாஜக நீண்ட காலமாக ஆசைகாட்டி வந்தது. மாநில மக்கள் தொகையில் 53 சதவிகிதமாக இருப்பதால்,  இவர்களைப் பயன்படுத்தி, ஆட்சியதி காரத்திற்கும் வந்தது. ஆனால், சொன்னபடி பாஜக நடந்துகொள்ளாததால், உயர் நீதிமன்றத்தை நாடிய மெய்டெய் மக்கள், அங்கு தங்களுக்கு சாதகமான தீர்ப்பைப் பெற்றனர்.

இதற்கிடையில், ‘மெய்டெய்’ மக்கள் பழங்குடி பட்டியலில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, குக்கி, நாகா உள்ளிட்ட பழங்குடி பிரிவினர், கடந்த மே 3-ஆம் தேதி துவங்கி போராட்டத்தில் இறங்கினர். இதற்குப் போட்டி யாக மெய்டெய் மக்களும் போராட்டத்தில் இறங்கவே மாநிலத்தில் வன்முறை வெடித்தது.  இரண்டு சமூகப் பிரிவு மக்களும் மோதிக் கொண்டு ரத்தம் சிந்தினர். ஆயிரக்கணக்கான வீடுகள், கடைகள், வாகனங்கள், வழிபாட்டுத் தலங்கள் அடித்து நொறுக்கி தீவைக்கப்பட்டன. 1 லட்சத்திற்கும் அதிகமானோர் இடம்பெயர வேண்டிய நிலை ஏற்பட்டது. மோதல் மற்றும் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 120-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் காயம் அடைந்தனர். மாநில காவல்துறை துவங்கி சிஆர்பிஎப், அசாம் ரைபிள்ஸ், கடைசியாக ராணுவம் வரை பாதுகாப்புக்கு அழைக்கப்பட்டும், மணிப்பூர் மாநிலத்தில் அமைதி திரும்பவில்லை. இந்நிலையில், மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டும் நடவடிக்கையின் ஒருபகுதியாக, 4 நாள் பயணமாக, உள்துறை அமைச்சர் அமித்ஷா, கடந்த திங்களன்று இம்பால் வந்தார். உள்துறைச் செயலா் அஜய் குமாா் பல்லா, புலனாய்வுப் பிரிவு இயக்குநா் தபன் குமாா்  தேகா ஆகியோரும் அமித்ஷாவுடன் வருகை தந்தனா்.

இவர்கள், முதல்வா் பைரேன் சிங்குடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், வன்முறையைக் கட்டுக்குள் கொண்டுவருவது பற்றி ஆலோசிக்கப்பட்டதுடன், உயிரிழந்த வர்களுக்கு ரூ. 10 லட்சம் நிவாரணம், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை  வழங்குவதென முடிவெடுக்கப்பட்டது. இரண்டாவது நாளில், முதல்வர் பைரேன் சிங்குடன் சேர்ந்து, தலைநகா் இம்பாலில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட அமித்ஷா, மெய்டெய் சமூகத்தினா், மகளிா் அமைப்புகள் உள்பட பல்வேறு தரப்பினருடன் உரையாடி னார். மேலும், மாநில காவல் துறை, மத்திய  ஆயுதக் காவல் படை மற்றும் ராணுவ உயரதி காரிகளின் கூட்டத்தில் பங்கேற்ற அவா், பாதுகாப்பு நிலவரம் குறித்து மறுஆய்வு செய்தாா். அப்போது, ‘மணிப்பூரில் அமைதி மற்றும் வளத்தை உறுதி செய்வதே அரசின் முன்னுரிமையாகும். அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’ என்று அதிகாரிகளுக்கு அவா் அறிவுறுத்தினாா். ஆனால், அமித்ஷா வருகை தந்த நாளில் மட்டும் 10 பேர் வன்முறையில் கொல்லப்பட்டனர்.

கலவரத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட சுராசந்த்பூருக்கு, ஹெலிகாப்டர் மூலம் சென்ற அமித்ஷா, அங்கு குக்கி பழங்குடியின தலைவா்கள், தேவாலயத் தலைவா்கள் உள்ளிட்டோரை சந்தித்துப் பேசினார். அவா்களின் கோரிக்கைகள் மற்றும் மாநிலத்தில் அமைதியை உறுதி செய்வதற்கான வழிமுறைகள் குறித்து கருத்துகளைக் கேட்டறிந்தாா். அப்போது, குக்கி பழங்குடியினா், தாங்கள் அதிகம் வாழும் மாவட்டங்களுக்கு தனி நிா்வாகம் வேண்டுமென்று கோரிக்கை விடுத்தனர். ஆனால், இந்தக் கோரிக்கையை ஏற்க முடியாது என்று ஏற்கெனவே  மாநில பாஜக அரசு அறிவித்து விட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஆய்வுப் பயணத்தின் நிறைவாக, தலைநகர் இம்பாலில் வியாழனன்று செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய அமித் ஷா, மாநிலத்தில் நடந்த வன்முறைச் சம்பவங்கள் குறித்து சிறப்பு சிபிஐ குழு விசாரணை நடத்தும் என்று அறிவித்தார்.  மேலும், மணிப்பூர் மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட உருவாக்கப்பட்டிருக்கும் குழுவின் தலைவராக ஆளுநர் பதவி வகிப்பார். சமூக ஆர்வலர்கள் அதில் உறுப்பினர்களாக இருப்பார்கள் என்று தெரிவித்ததுடன், கலவரத்துக்கான காரணம் மற்றும் கலவரத்தைத் தூண்டியவர்கள் யார் என்பதை அடையாளம் காணும் வகையில் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்படும்; அதோடு, மணிப்பூர் கலவரம் தொடர்பாக பல விசாரணை அமைப்புகள் தங்களது தரப்பிலிருந்து விசாரணையை நடத்தும்; விசாரணை நியாயமான முறையில் நடப்பதை அவை உறுதி செய்யும் என்றும் அமித் ஷா அறிவித்தார்.